Wednesday 13 February 2013

ஜெருசலேம் புனித பயணம் தமிழக அரசு அறிவிப்பு

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரசு நிதியுதவி ரூ.20 ஆயிரம்:

        தமிழக அரசின் நிதியுதவி திட்டத்தின்கீழ் ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று வர தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்கான பயண முகவர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, புனிதப் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்களின் பயண நிரல்படி எகிப்து, இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளை உள்ளடக்கிய 10 நாள் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு ரூ.73 ஆயிரம் மற்றும் இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளை உள்ளடக்கிய 7 அல்லது 8 நாட்கள் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு ரூ.66 ஆயிரம் பயணத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.



விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு:

              அரசு நிதியுதவி ரூ.20 ஆயிரத்தை பயண முகவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் நேரடியாக செலுத்தப்பட உள்ளதால் பயனாளிகள் மீதத்தொகையான ரூ.53 ஆயிரம் (10 நாட்கள்) அல்லது ரூ.46 ஆயிரம் (7 அல்லது 8 நாட்கள்) மட்டும் பயண முகவர்களுக்கு செலுத்தினால் போதுமானது.அரசு திட்டத்தின் கீழ் இப்புனிதப் பயணம் மேற்கொள்ள விருப்பம் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் மேலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

தாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டுகோள்:

             எனவே, ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள் மேலும் தாமதமின்றி அதற்கான விண்ணப்பத்தினை, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807, (5 வது தளம்), அண்ணா சாலை, சென்னை–600002 என்ற முகவரிக்கு ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் ஆகிய இடங்களில் விண்ணப்பம் கிடைக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 comment: